மதுரை விராட்டிபத்து சாலை மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 67ஆவது வார்டு பகுதியில் உள்ள கோ - ஆப் டெக்ஸ் காலனியில் வசித்து வருபவர் பி. நடராஜன். அப்பகுதியில் உள்ள மக்கள் பிஎன்ஆர் என்று சந்தோஷமாக அழைப்பார்கள். இவர் 2000ஆவது ஆண்டிலிருந்து மாடி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.
சுமார் 23 ஆண்டுகளாக பராமரித்து வரும் பி. நடராஜன் இது குறித்து கூறுகையில், “மாடித் தோட்டம் வைத்து பரமரிப்பது எனக்கு மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. மேலும் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் இதிலிருந்து தினசரி எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், முள்ளங்கி மற்றும் கீரை வகைகள், எலுமிச்சம் பழம் சிறிய வகை ஆரஞ்சு மரம், மாதுளை இன்னும் சில வகை கொடி வழியாக விளையக்கூடிய காய்கள் ஆகியவற்றை விளைவிக்கிறார். அவற்றுக்கு இயற்கை உரங்கள் மட்டுமே இடப்படுகிறது. இதனால் சத்தான காய்கறி, கீரை வகைகள் எங்களுடைய வீட்டிற்கு கிடைக்கின்றது. மேலும் காலையில் நான் 5 மணிக்கு எழுந்தவுடன் மாடிக்கு வந்து விடுவேன். வெளியில் நான் நடைபயிற்சி மேற்கொள்வதில்லை. மேலேதான் நடை பயிற்சி மேற்கொள்வேன். என்னுடன் நண்பர் ஒருவரும் எங்களுடைய வீட்டு வாகன ஓட்டுநரும் வந்து உதவி செய்வார்கள். செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, அன்றைக்கு விளைந்த காய்கறிகளை பறிப்பது என்று மூன்று பேரும் உரிய பணிகளை செய்து வருவோம். அதேபோல் பூசணிக்காய் கொடி போட்டு அதில் விளையும் பூசணிக்காயினை எங்கள் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்குமே கொடுத்து விடுவோம்.
என்னை பார்க்க வரும் பலரும் இங்கே அமர்ந்துதான் பேசி விட்டு செல்வார்கள். அந்த அளவிற்கு குளிர்ச்சியாக வும் பேசுவதற்கு மனதுக்கு அமைதியாகவும் இருக்கும். குறிப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த தோழர் பொ.மோகன், என்.நன்மாறன், ஜோதிராம் போன்றவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வந்து இந்த மாடி தோட்டத்தில் அதிக நேரம் அமர்ந்து என்னிடம் பேசிச்சென்றுள்ளார்கள்.
நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். தொழில் நிமித்தமாக நகருக்குள் குடிபெயர்ந்து விட்டேன். அதனால் விவசாயம் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் தோன்றியது இல்லை. ஏனென் றால் தினசரி காலையில் இங்கு வந்து இந்த செடி களை பராமரிப்பது எனக்கு விவசாயம் பார்க்கின்ற திருப்தி உள்ளது. மேலும் என்னுடைய குழந்தைகள் தெரிந்து கொள்வதற்காகவே நான் மேலே மரங்கள், செடிகள் வளரும் இடங்களில் சுவர்களில் விவசா யத்தைப் பற்றிய ஓவியம் வரைந்து வைத்துள்ளேன். அதில் எங்கள் குடும்பத்தில் எப்படி விவசாயம் செய் தோம். நான் எப்படி விவசாய வேலை பார்த்தேன் என்பதை குறிப்பிடும் வகையில் ஓவியமாக வரைந்து வைத்துள்ளேன். மேலும் ஓர் உழவன் உழுவது போல் சிற்பம் ஒன்றும் செய்து இங்கு வைத்துள்ளேன். தினசரி இங்கு விளைவிக்கும் கீரைகளில் இருந்து சூப் செய்து காலையிலேயே குடிப்பது வழக்கம். அதற்காக மேலேயே ஒரு மின்சார அடுப்பு ஒன்றும் தேவையான மளிகைப் பொருட்களும் இங்கேயே வைத்துள்ளேன். பெரிய அளவில் நாம் விவசாயம் செய்ய முடிய வில்லை என்றாலும் மன ஆறுதலுக்காக வீட்டிலேயே இது போன்ற ஏற்பாடுகளை செய்து நான் செயல்படுத்தி வருகிறேன்.
ஆண்டுக்கு ஒரு முறை இங்கு வளரும் செடிகளை எடுத்துவிட்டு புதிதாக செடிகள் நடுவது வழக்கம். குறிப் பாக ஆடி பதினெட்டாம் பெருக்கன்று ஒவ்வொரு ஆண்டும் செய்து விடுவேன். இதில் இயற்கை உரம் என்று மாட்டுச் சாணம் மண்புழு உரம் போன்றவை மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. சத்தான காய்கறி என்பது என்னுடைய வீட்டிற்கு நேரடியாகக் கிடைக்கின்றது.
என்னுடைய மாடி தோட்டத்தை என் நண்பர்கள் பலரும் பார்த்துவிட்டு எங்களுக்கும் இதுபோல் அமைப் பதற்கு ஆலோசனை கூறுங்கள் என்று கூறினார்கள். அவர்களுக்கும் என்னால் முடிந்த ஆலோசனைகளை கூறியுள்ளேன் என்று கூறினார்.
புதன்கிழமை அன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் அப்பகுதியில் ஆய்விற்காக சென்ற போது தன்னுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று நாடராஜன் தன்வீட்டு மாடி தோட்டத்தை காண்பித்தார். இதனை பார்த்த துணை மேயர் தி.நாகராஜன் தங்களு டைய பணிகளுக்கு மத்தியிலும் இதுபோல் ஒரு தோட்டத்தை வீட்டில் வைத்து பராமரித்து வருகிறீர்கள். இது பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும். மேலும் மொட்டை மாடிகளை காலியாக விடாமல் இதுபோல் வீட்டுக்கு தேவையான சில காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொண்டால் அது பெருமளவில் நமக்கு உதவி யாக இருக்கும். கோடை காலத்தில் வீட்டில் வெயிலின் தாக்கமும் குறைந்திருக்கும் என்று கூறினார்.